search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு"

    வேட்டவலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.செல்வமணி முன்னிலை வகித்தார்.

    பள்ளி மாணவர்கள் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி பள்ளியில் இருந்து அரண்மனை வீதி, கடை வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.

    இதில் வேட்டவலம் அரிமா சங்கத்தலைவர் ஜான்பீட்டர், இளங்கோவன், ரமேஷ், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் வெற்றிவேலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 
    டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.
    நாமக்கல்:

    டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தி ஆகும். எனவே மழைக்காலங்களில் மழை நீரானது வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகியவற்றில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். நாமக்கல் நகராட்சி என்.ஜி.ஜி.ஒ. காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா? என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா? என்றும் நேரில் பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, அதை உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    பின்னர் மளிகை கடைகளை பார்வையிட்ட கலெக்டர், கடையில் வைக்கப்பட்டுள்ள ‘பிரிட்ஜ்’ பின்புறத்தில் நீர் தேங்கும் பகுதியினையும், குளிர்பான பாட்டில்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கல்விக்கரசன் உள்பட சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். 
    திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்துறையின் சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை நேற்று, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு கஷாயத்தினை வழங்கி னார்.

    இதன் பின்னர் அவர் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உள்பட தீவிர காய்ச்சல் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாகன பிரசாரம் மாவட்டம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் மருத்துவ அலுவலர்கள் உள்பட 1500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் அபேட் மருந்து தெளித்தல், நீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு புகை தெளிப்பான், கொசு ஒழிப்பு பணிகள், மருத்துவ முகாம் நடத்துதல், நிலவேம்பு கஷாயம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகின்ற இடங்களான சிமெண்டு தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், கிணறுகள், சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காதவாறும் வீட்டுப்புறங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையற்ற குப்பைகள், பழைய டயர்கள் உள்ளிட்டவைகளை அகற்ற துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையினை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தங்களது பகுதிகளுக்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள வரும் சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு கொசுவை முழுமையாக ஒழித்து உடல் ஆரோக்கியத்துடனும், முழு சுகாதாரத்துடனும் பராமரித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1 கோடி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 816 கால்நடை மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×